
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
1922 டிசம்பர் 4-ல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள செளதபள்ளி கிராமத்தில் பிறந்தவர் கண்டசாலா. இளம் வயதிலிருந்தே இசையிலும் நடனத்திலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னாட்களில் தெலுங்குத் திரையுலகில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் புகழ்பெற்றார். தமிழிலும் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். சுதந்திரப் போராட்ட வீரர், திருப்பதி தேவஸ்தானத்தின் அரசவை இசைக் கலைஞர் எனப் பன்முகங்கள் கொண்ட கண்டசாலா, ஐநா சபையிலும் இசை நிகழ்ச்சி நடத்திய பெருமைக்குரியவர்.
அவரது நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்துவருகின்றன. கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா மேற்கொண்டுள்ளார். டிசம்பர் 4-ல் சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்துவார்கள். இந்தியாவைச் சேர்ந்த அனைத்து வகையான பாரம்பரிய நடனங்களும் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்குபெறுவார்கள்.
100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களைப் பாடுவார்கள். நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக கலா பிரதர்ஷினியைச் சேர்ந்த கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.