இரவில் திடீரென வந்த அலறல் சத்தம்... வந்து பார்த்த குடிமன்னர்கள் அதிர்ச்சி: டாஸ்மாக் அருகில் நடந்த கொடூர கொலை

இரவில் திடீரென வந்த அலறல் சத்தம்... வந்து பார்த்த குடிமன்னர்கள் அதிர்ச்சி: டாஸ்மாக் அருகில் நடந்த கொடூர கொலை

கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை பகுதியில் மது அருந்துக் கொண்டிருந்த நபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் நான்குவழிச்சாலைப் பணிகள் நடந்துவருகிறது. இங்குள்ள குலாளர் தெருபகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தக்கடையில் மதுவாங்குவோர் அந்த நான்குவழிச்சாலையில் அமர்ந்து குடிப்பது வழக்கம். அப்படி நேற்று இரவும் பலரும் அந்த நான்குவழிச்சாலையில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டது. ஆங்காங்கே குடித்துக்கொண்டு இருந்தவர்கள் சத்தம்வந்த திசையைப் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். கூட்டத்தைப் பார்த்ததும் அங்கே மறைந்திருந்த மூன்றுபேர் தப்பியோடினர்.

அங்கு நின்றவர்கள் துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டுமே சிக்கினார். அவரை இரணியல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், “பிடிபட்டவர் குருந்தன்கோடு முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த அசோக்(25) என்பது தெரியவந்தது. தப்பியோடியவர்களில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த அஜின் ஜோஸ் என்பதும் தெரியவந்தது. கொலையான நபர் களியக்காவிளையைச் சேர்ந்த ரீகன்(30) என்பதும் தெரியவந்தது.

ரீகனை இந்த மூன்றுபேர் கொண்ட கும்பல் ஏன் கொலை செய்தது என்னும் விவரம் இதுவரை தெரியவில்லை. ரீகன் மீது குமரிமாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களிலும் கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in