
பீகார் மாநில இளைஞர் ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ள பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் அந்த இளைஞரையும் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே நீலாம்பூர் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சூலூர்- நீலாம்பூர் பகுதியில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு வீட்டில் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த போலீஸார் அதை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த திலீப்குமார் (38) என்பவரை கைது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்து ரூ.10,81,600 மதிப்புள்ள 156 கிலோ எடைகொண்ட 27,040 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டி பணம் வெகுமதி வழங்கினார்.