ஈரோடு மாவட்டம், சிவகிரியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ஒரு டன் அளவிலான குட்காவை பறிமுதல் செய்துள்ள போலீஸார் அவற்றை வைத்திருந்த மளிகை கடைக்காரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
சிவகிரி இளங்கோ தெருவில் வேல்முருகன் (48) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் தம்பி சந்திரசேகர் (45) சிவகிரி புதிய பேருந்து நிலையம் அருகே பட்டேல் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் போதைப் பொருளான குட்காவை பட்டேல் தெருவில் வாடகைக்கு குடோன் எடுத்து மளிகை பொருள் மற்றும் அதற்குள் மறைமுகமாக குட்காவை வைத்து விற்பனை செய்வதாக கோவை மண்டல திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸார் சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள வேல்முருகன் மற்றும் இவரின் தம்பி சந்திரசேகரின் வாடகை குடோன் பகுதியில் நேற்று ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த ஒரு டன் அளவிலான குட்கா மூட்டைகளை குடோனில் இறக்கிக் கொண்டிருந்தனர். அதனையடுத்து போலீஸார் கையும் களவுமாக குட்கா மூட்டைகளைப் பிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் மளிகை கடை உரிமையாளர்கள் வேல்முருகன், சந்திரசேகர் மற்றும் வாகன ஓட்டுநர் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். சுமார் ஒரு டன் குட்காவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளது சிவகிரி மற்றும் சுற்றுப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,