தமிழகம் முழுவதும் புத்தக கண்காட்சி நடத்த அரசு நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் புத்தக கண்காட்சி நடத்த அரசு நிதி ஒதுக்கீடு

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்துவதற்காக 4.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில், தமிழகத்தில் சென்னை புத்தக கண்காட்சி போன்று மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாவட்டங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 17.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா 14 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா 12 லட்ச ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சிக்கு மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கம் ஆகியவற்றிலிருந்து உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்கள். அதே போல், மாவட்ட அளவில் புத்தக கண்காட்சிகளை நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவில் அனைத்துத் துறை அதிகாரிகள், வாசகர்கள், பதிப்பாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in