ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் நான்கு ரவுடிகள் சம்மதம்

நீதிமன்றத்துக்கு வரும் ரவுடிகள்
நீதிமன்றத்துக்கு வரும் ரவுடிகள்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தங்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஏற்கெனவே ரவுடிகள்  எட்டு பேர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று மேலும் 4 ரவுடிகள்  உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 

திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கை தற்போது எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி  ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நீதிபதி  சிவக்குமார் அமர்வில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. 

சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகத்தின் பிரபலமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த  நவ. 1,  7 மற்றும் 14-ம் தேதிகளில் இதுகுறித்த விசாரணை  நடைபெற்றது.  சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புதல் அல்லது ஆட்சேபனையை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ரவுடிகள் மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன் , ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா, கடலூர் சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பேரும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 9 பேர் மட்டும் கடந்த 14-ம் தேதி ஜே எம் 6 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

இவர்களில் சாமி ரவி, சத்யராஜ், லட்சுமி நாராயணன், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கெனவே தான் காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து 17-ம் தேதிக்கு  வழக்கை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம்  ஆஜராகாத ரவுடிகளை கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டும்  உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்றைய தினம் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.  அப்போது தங்களிடம்  உண்மை கண்டறியும் சோதனை நடத்த நான்கு பேரும் சம்மதம்  தெரிவித்தனர். 

மேலும், உண்மை கண்டறியும் சோதனையின்போது தங்கள் சார்பில் மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்து மனுத்தாக்கல் செய்தனர்.  இதுவரை மொத்தம் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஒருவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.  இவர்கள்  13 பேரும் வரும்  21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி  உத்தரவிட்டார்.

மேலும்  சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் உடல் தகுதி சோதனை நடத்த உத்தரவிட்ட  நீதிபதி,  ஒரு நாளைக்கு  நான்கு நபர்களாக மூன்று நாட்களில் உடல் தகுதி சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு ஆணையிட்டார்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட பின்னராவது  ராமஜெயம் கொலை வழக்கில் ஏதாவது முக்கிய தடையமோ,  அல்லது உண்மைகளோ  தெரிய வருமா என்று சிறப்பு புலனாய்வுக் குழு மட்டுமின்றி திருச்சி மக்களும்  எதிர்பார்த்து  காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in