
பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 வது பட்டாலின் இயங்கி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பேரிடர் நிகழும் காலங்களில் இங்குள்ள படை வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கரையை இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விளைவாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதையடுத்து இந்த நான்கு மாவட்டங்களுக்கும் தலா 25 வீரர்கள் கொண்ட படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 100 பேர் அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் இந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.