தவறான சிகிச்சையால் கால்கள் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: 17 வயதில் கனவுகளை இழந்த சோகம்

தவறான சிகிச்சையால் கால்கள் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: 17 வயதில் கனவுகளை இழந்த சோகம்

சென்னையில், அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. 17 வயதான இவர், கால்பந்து வீராங்கனை. விளையாட்டில் அதிக ஆர்வம் காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த பிரியா, அங்கு கால்பந்து பயிற்சியும் பெற்று வந்தார். இதனிடையே, பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்து.

இதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரியா சேர்க்கப்பட்டார். அவருக்கு தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். ஆனாலும் அவருக்கு காலில் வலி குறையவில்லை. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் மாணவிக்கு பரிசோதனை செய்தனர். அப்போது, காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறினர். இதைக் கேட்டு பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பின்னர், மகளைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, மாணவியின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனிடையே, "மருத்துவர்களின் அலட்சியப் போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்கக் காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு உள்ள காயம் சரியானதும் பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும் மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளின் இழப்பை தாங்கமுடியாமல் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. பிரியா தனது 17 வயதில் அனைத்து கனவுகளையும் இழந்துவிட்டாளே என்று உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். மாணவி உயிரிழந்ததை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in