பூ வியாபாரி வீடுபுகுந்து வெட்டிக் கொலை: பார் உரிமையாளர் வெறிச்செயல்!

பூ வியாபாரி வீடுபுகுந்து வெட்டிக் கொலை: பார் உரிமையாளர் வெறிச்செயல்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பூ வியாபாரி நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மஞ்சநம்பிக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அழகுதுரை. பூ வியாபாரியாக உள்ளார். நேற்று இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல் ஒன்று அழகுதுரையை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயம் அடைந்த அழகுதுரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகுதுரை பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலைக்கைப்பற்றிய கயத்தாறு போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸார் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி விவரம் தெரியவந்தது. அழகுதுரையும், அவரது உறவினர் ஒருவரும் மஞ்சநம்பிக்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் பார் ஒன்றில் மது அருந்தச் சென்றுள்ளனர். அப்போது அழகுதுரைக்கும், அவரது உறவினருக்கும் இடையே திடீர் சண்டை ஏற்பட்டது. இதைக்கண்டித்த கரிசல்குளத்தைச் சேர்ந்த பார் உரிமையாளர் மாடக்கண்ணு, என் பாரில் வைத்து சண்டை போடக் கூடாது. வெளியில் போய் சண்டை போடுங்கள் எனச் சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து அழகுதுரை வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், தன் பாரில் வைத்து சண்டைபோடும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என கோபத்தில் பார் உரிமையாளர் மாடசாமி, அவரது மகன் பட்டு ராஜா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் பூ வியாபாரி அழகுதுரை வீடு புகுந்து வெட்டிக்கொன்றுள்ளது எனத் தெரியவந்தது. கயத்தாறு போலீஸார் இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும் ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in