
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விமானமும், நாளை புதுச்சேரியில் இருந்து புறப்படும் இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மாண்டஸ் புயலாக உருவெடுத்துள்ளது. இது நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் விளைவாக இன்று முதல் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் மழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்கள் மோசமான வானிலை மற்றும் அதிக கன மழை எச்சரிக்கையால் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் இருந்து இன்று மங்களூர் செல்லும் விமானமும், மங்களூரில் இருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மட்டும் மொத்தம் ஆறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மோசமடைந்தால் மேலும் பல விமானங்கள் ரத்தாகவும், பல விமானங்கள் காலதாமதமாகவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது