ஜம்மு-காஷ்மீரில் இருந்து அக்னிபத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தொகுதி அக்னிவீரர்கள் இன்று இந்திய ராணுவத்தில் பயிற்சிக்காக சேர்ந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் அக்னிபத் திட்டம் மூலமாக உடல் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை, எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு உள்ளிட்ட கடுமையான தேர்வுகளுக்குப் பிறகு சுமார் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். டிசம்பர் 24, 2022 அன்று, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்திலிருந்து, இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் சுமார் 30 பயிற்சி மையங்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 25 முதல் 30-ம் தேதிக்குள் பயிற்சிக்கு வருவார்கள், அவர்களின் பயிற்சி ஜனவரி 1 முதல் தொடங்கும்.
ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட அக்னிபத் திட்டம், ஆயுதப்படைகளில் இளைஞர்களை சேர்ப்பதற்கான விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின்படி, பதினேழரை வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அவர்கள் நான்கு ஆண்டு பதவிக்காலத்திற்கு பணியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களில் இருந்து 25 சதவீதத்தினருக்கு மட்டும் தொடர்ந்து ராணுவத்தில் பணி வழங்க இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல மாநிலங்களில் இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், அக்னிவீரர்களின் அதிகபட்ச வயது வரம்பை 23ஆக அரசாங்கம் நீட்டித்தது.