சிவகாசியில் பட்டாசு வெடித்ததில் கோயில் ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பராசக்தி காலனியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக திருப்பணி பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக, கோயில் ராஜகோபுரத்தில் சாரங்கள் அமைக்கப்பட்டு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு கோயில் வெளியே நடந்த திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து பறந்த தீப்பொறி ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரங்களில் விழுந்தது. இதனால் சாரங்கள் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.