`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!

`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

மதுரை மூன்றுமாவடியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் ஆயிரத்து 295 சதுரடி பரப்பளவில் 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்நிலையில், அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "மதுரையில் 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 அல்லது 4-வது வாரத்தில் நடைபெறும், நாடாளுமன்ற கூட்டம், சுதந்திர தினம் வருவதால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தள்ளிப் போகிறது. அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது. அவர்கள் ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சி காலத்திற்குள் மதுரையில் குடிநீர், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in