கால்களை இருவர் பிடித்துக்கொள்ள மருமகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமனார்: நடுரோட்டில் பயங்கரம்

காதல் திருமணம் செய்த ஜெகன், சரண்யா.  நடுரோட்டில் கொலை செய்யப்படும் ஜெகன்.
காதல் திருமணம் செய்த ஜெகன், சரண்யா. நடுரோட்டில் கொலை செய்யப்படும் ஜெகன்.கால்களை இருவர் பிடித்துக்கொள்ள மருமகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமனார்: நடுரோட்டில் பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே தனது மகளைக் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் டூவீலரில் வந்த மருமகனை வழிமறித்து மாமனார் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைமீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், இன்று பிற்பகலில் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்காக தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை பக்கமாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி விட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை சரமாரியாக வெட்டினர். இதில் ஜெகன் உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த ஜெகனின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் ஜெகனின் உடலை சாலையில் இருந்து எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, எஸ்பி சரோஜ்குமார் தாகூர், டிஎஸ்பி தமிழரசி மற்றும் போலீஸார், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து ஜெகனின் உடலை மீட்ட போலீஸார் , உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை போலீஸார் தேடி வந்தனர்.

மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து. மருமகனை மாமனாரை தனது உறவினர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலையை அந்த பகுதியில் இருந்த சிலர் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர். ஜெகனின் கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள, 2 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மருமகனை வெட்டிக்கொலை செய்த சங்கர், கிருஷ்ணகிரியில் உள்ள கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த கொலை சம்பவத்தால் கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in