
பாலிவுட் நடிகர் சதீஷ் சந்திர கவுசிக் மரணத்தின் பின்னணியில், தாவூத் இப்ராஹிம் உட்பட பல ஐயங்களை, சதீஷ் நண்பரின் 2வது மனைவி எழுப்பியுள்ளார். இதனால் பாலிவுட் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
80களின் பாலிவுட் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் பெயர் பெற்றிருந்தவர் சதீஷ் சந்திர கவுசிக். பின்னர் தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்டவற்றிலும் முத்திரை பதித்து வந்தார். கடந்த வாரம், 66 வயதாகும் சதீஷ் ஹோலி கொண்டாட்டத்துக்காக டெல்லியில் உள்ள நண்பர் விகாஸ் மாலு என்பவரது பண்ணை வீட்டில் தங்கினார். அன்று நள்ளிரவு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாரடைப்பு காரணமாக சதீஷ் இறந்ததாக போஸ்ட்மார்டம் அறிக்கை தெரிவித்தாலும், பண்ணை வீட்டில் போலீசார் கைப்பற்றிய சில மருந்துப் பொருட்கள் சதீஷ் மரணத்தின் மீது ஐயத்தை உருவாக்கின. இதற்கிடையே பண்ணை வீட்டின் உரிமையாளரும், சதீஷ் நண்பருமான விகாஸ் மாலு என்பவரது 2வது மனைவி புதிய குண்டு வீசியிருக்கிறார்.
”சதீஷ் மரணத்தின் பின்னணியில் எனது கணவர் விகாஸ் இருக்கிறார். சதீஷிடமிருந்து வாங்கிய ரூ.15 கோடியை விகாஸ் திருப்பித் தராது இழுத்தடித்தார். அண்மையில் துபாயில் வைத்து இது தொடர்பாக இருவர் இடையே பிரச்சினை எழுந்தது.
சதீஷை தனது கட்டுப்பாட்டில் வைக்க வயாகரா மாத்திரைகள் மற்றும் ரஷ்ய அழகிகளை பயன்படுத்தியதாக எனது கணவர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். விகாஸ் பண்ணை வீட்டுக்கு தாவூத் இப்ராஹிமின் மகன் மற்றும் நிழலுலக ஆட்கள் அடிக்கடி வருவார்கள். எனவே சதீஷ் மரணம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று பேட்டி தந்துள்ளார்.
ஆனால், விகாஸ் மற்றும் அவரது 2வது மனைவி இடையே காவல்நிலையப் புகார்கள் வரை பிரச்சினைகள் நிலுவையில் இருப்பதால், இந்தப் பெண்ணின் தகவல்களை நம்பி விசாரணையை முன்னெடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். பண்ணை வீட்டில் போலீசார் கைப்பற்றிய மருந்துப் பொருட்கள் வயகரா போன்றவையா, என்பது குறித்தும் இன்னமும் காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.