`அறிவிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்கவும்'- தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்!

நெல் கொள்முதல் நிலைய வாயில்
நெல் கொள்முதல் நிலைய வாயில்`அறிவிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்கவும்'- தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்!

`மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் இன்னும் முழுமையாக  திறக்கப்படாததால் விவசாயிகள் அவுதியுற்று வருகிறார்கள். அதனால்  உடனடியாக எல்லா இடங்களிலும் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்' என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இந்தாண்டு பயிரிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் மட்டுமின்றி,  குறித்த காலத்திற்கு முன்னரே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் முழு வீச்சில் சாகுபடி பணிகள் நடைபெற்றன.

இந்தநிலையில், கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த  வடகிழக்கு பருவ மழையின்  தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் முழுவதும் மூழ்கி சேதமடைந்தது.  இதையடுத்து  அரசு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், இன்சூரன்ஸ் தொகையும் வழங்கியுள்ளது. 

விவசாயம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.40 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகிறது. மேலும், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவற்றில்  60 சதவீத நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இதுவரை திறக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

குத்தாலம் தாலுகா தேரழந்தூரில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இங்குள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமார் 40 மெட்ரிக்டன் நெல்லினை கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைத்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் பெய்யும் மழையில் நனையாமல் பாதுகாக்க நெல்லினை தார்ப்பாலின் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

மேலும், ஓரிரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், உடனடியாக இந்த கொள்முதல் நிலையம் உட்பட அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களையும் திறந்து நெல் கொள்முதலை முழு வீச்சில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக தளர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in