பிரபல சின்னத்திரை நடிகரின் மனைவி திடீர் மரணம்

பிரபல  சின்னத்திரை நடிகரின்  மனைவி திடீர் மரணம்

சின்னத்திரையின் பிரபல நடிகரான பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகர் கல்யாண் குமார். இவரது மகன் பரத் கல்யாண். கன்னட திரையுலகில் நடிகராக திகழ்ந்த பரத் கல்யாண், தமிழில் 'ஜென்டில்மேன்' உள்பட பலர் படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகரின் மகனாக இருந்த போதும், தமிழ் திரையுலகில் இவருக்கான அங்கீகாரம் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக சின்னத்திரை பக்கம் இவர் திரும்பினார்.

தமிழில் 'அபூர்வ ராகங்கள்' உள்பட பல்வேறு தொடர்களில் மட்டுமின்றி தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'ஜமீலா', விஜய் தொலைக்காட்சியில ஒளிப்பராகி வரும் 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி(43) இன்று அதிகாலை 5 மணி அளவில் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பேலியோ டயட்டை பின்பற்றிய போது பிரியதர்ஷினிக்கு சர்க்கரை நோய் அதிகரித்தது. இதனால் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதமாக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். இன்று கோமா நிலையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பரத் கல்யாண்,பிரியதர்ஷினி தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பரத் கல்யாண் மனைவி மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலர், இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in