நடிகை ராதிகா நடித்த ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கிய ஓஎன் ரத்தினத்தின் மனைவி பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களான நடிகை ராதிகா சரத்குமார் நடித்த ‘வாணி ராணி’, ‘பாண்டவர் இல்லம்’, ‘பிரியமான தோழி’, ‘செவ்வந்தி’ போன்ற சீரியல்களை இயக்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ஓ.என். ரத்னம். குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெரும்.
இயக்குநர் ஓ.என். ரத்னம் மற்றும் பிரியா பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்குமே பொள்ளாச்சியில் ஒரு கிராமம் தான் சொந்த ஊர். தற்போது பள்ளி விடுமுறைக்காக மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தனர்.
இந்தநிலையில், சொத்து மற்றும் தொழில் தொடங்குவது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமான ஒன்று. நேற்று இரவும் இருவருக்குள் சண்டை நடந்துள்ளது. இதில் ரத்னம் பிரியாவை அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியா, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீஸார் பிரியாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.