60 ஆண்டுகளாக 1 ரூபாய்க்கு சிகிச்சை; கின்னஸ் மருத்துவர் மறைவு - பிரதமர் மோடி, மம்தா இரங்கல்

60 ஆண்டுகளாக 1 ரூபாய்க்கு சிகிச்சை; கின்னஸ் மருத்துவர் மறைவு - பிரதமர் மோடி, மம்தா இரங்கல்

மேற்கு வங்கத்தில் சுமார் 60 ஆண்டுகளாக ஒரு ரூபாயில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து புகழ்பெற்ற ‘ஒரு ரூபாய் மருத்துவர்’ சுஷோவன் பானர்ஜி காலமானார்

ஒரு ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுஷோவன், மேற்குவங்க மாநிலம் பிர்பூமில் உள்ள போல்பூரில் 60 ஆண்டு காலமாக ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சுஷோவன் ஒருமுறை போல்பூரில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் உருவான பிறகு, பிர்பூமில் அக்கட்சியின் முதல் மாவட்டத் தலைவராக இருந்தார்.

2020-ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில் அதிகபட்ச நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பிடித்தார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், 20 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள நார்த் சிட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 83 வயதான அவர் இன்று காலை 11.30 மணியளவில் இறந்தார்.

ஒரு ரூபாய் மருத்துவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "மருத்துவர் சுஷோவன் பானர்ஜி மனித ஆத்மாவின் சிறந்த உருவகத்தை வெளிப்படுத்தினார். அவர் பலரைக் குணப்படுத்திய அன்பான மற்றும் பெரிய இதயமுள்ள நபராக நினைவுகூரப்படுவார். பத்ம விருது வழங்கும் விழாவில் அவருடன் நான் உரையாடியதை நினைவு கூர்கிறேன். அவரது மறைவு வேதனை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் மருத்துவரின் மறைவுக்கு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்,"மருத்துவர் சுஷோவன் அவர்களின் மறைவு குறித்து அறிந்து வருத்தமாக உள்ளது. பீர்பூமின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர், பொதுநலம் கொண்ட உதவும் குணத்துக்கு பெயர் பெற்றவர்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in