போலி கௌரவ டாக்டர் பட்டம்: அண்ணா பல்கலை புகாரால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திரை பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம்
திரை பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் போலி கௌரவ டாக்டர் பட்டம்: அண்ணா பல்கலை புகாரால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் திரை பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரையை சேர்ந்த ஈரோடு மகேஷ், நடிகர் கோகுல், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு இன்டர்நேஷ்னல் ஆண்ட்டி கரெப்ஷன் அண்ட் ஹூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் கடந்த 26-ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் லோகோவை பயன்படுத்தி போலி கௌரவ பட்டம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ரவிக்குமார் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அமைப்பின் இயக்குநரான ஹரிஷ் என்பவர் கின்னஸ் சாதனை புரிந்தவர்களுக்கும், சர்வதேச சாம்பியன்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவதாக கூறி கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதை அண்ணா பல்கலைக்கழக டீனால் கருத்தில் கொள்ளப்படவில்லை என தெரிவித்தார். அதன் பிறகு ஹரிஷ் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகத்தின் பெயரில் கடிதம் கொடுக்கப்பட்டதால் அவரது மரியாதையின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் அளித்தது போன்று வழங்கப்பட்ட கடிதம் போலியானது என அவரே மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அண்ணா பல்கலைக்கழக பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை மோசடி செய்து, உரிய அங்கீகாரம் இல்லாத கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாகவும், போலி ஆவணங்களை உருவாக்கி இந்திய அரசின் லோகோவை தவறாக பயன்படுத்தியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரினை கோட்டூர்புரம் போலீஸார் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் வழங்கப்பட்ட பட்டங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து கோட்டூர்புரம் போலீஸார் ஏழு பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவண மோசடி, அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல், தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டம் வழங்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அடுத்தக்கட்டமாக பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் மற்றும் அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின் அவர்கள் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in