விஸ்வரூபமெடுக்கும் போலி மருத்துவர்கள் விவகாரம்: 91 இடங்களில் சிபிஐ நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்

விஸ்வரூபமெடுக்கும் போலி மருத்துவர்கள்  விவகாரம்: 91 இடங்களில் சிபிஐ நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்

தகுதித்தேர்வில் தேர்ச்சியடையாமல் போலிச்சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 91 இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது. இதில் போலி ஆவணங்கள், சான்றிதழ்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சுனில் குப்தா கடந்த அக்டோபர் மாதம் சிபிஐயிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வெளிநாடுகளில் மருத்துவபடிப்பு முடித்து இந்தியாவில் மருத்துவராவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 62 பேர் மற்றும் முறைப்படி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத 12 பேர் உள்பட மொத்தம் 73 பேர் மீது அவர் புகார் அளித்துள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் கவனத்துக்கு வராமலேயே சில மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உதவியுடன் சிலர் முறைகேடாக தங்களை மாநில மருத்துவ கவுன்சிலில் மட்டும் பதிவு செய்து கொண்டு மருத்துவராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 21-ம் தேதி டெல்லியில் 73 வெளிநாட்டு மருத்துவம் படித்து முடித்தவர்களுக்கும் 14 மாநில கவுன்சிலில் நிர்வாகிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக சிபிஐ அதிகாரிகள் இந்தியா முழுவதும் 91 இடங்களில் இன்று சோதனை நடத்தினர். குறிப்பாக 14 மாநில மருத்துவ கவுன்சில் அலுவலகங்களிலும் மற்றும் 73 வெளிநாடு மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் தொடர்பான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி ஆகிய இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.

மதுரை புறநகரைச் சேர்ந்த விக்னேஷ் வெள்ளைக்கண்ணு, 2009-ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ முதுகலை படிப்பை முடித்துள்ளார். பின்னர் 2020-ல் பிஹார் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், 2018-ல் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.  இதே போல் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வசிக்கும் சீயர்ஸ் சாமுவேல் என்பவர் 2007-ல் ரஷ்யாவில் மருத்துவ முதுகலை பட்டம் முடித்து பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2019.ல் பதிவு செய்துள்ளார்.

ஆனால், இவர் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்தக் காரணங்களுக்காக இவர்களது வீடு மற்றும் மருத்துவ நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தமிழகம் உள்ளிட்ட 91 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் போலிச்சான்றிதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலிச்சான்றிதழ் பெற்றவர்கள் இந்தியாவில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 14 மாநில மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் சேர்ந்து எத்தனை வெளிநாட்டு மருத்துவம் படித்த நபர்களுக்கு போலிச்சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in