தனது முன்னாள் காதலனின் மனைவியைக் கூலிப்படையை ஏவி ஆசிரியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் தேவர்து சிங்(33). இவர் பன்வெல் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா ராவத்(30) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் தேவர்துவின் முன்னாள் காதலியான நிகிதா (32) தொடர்பு கொண்டுள்ளார். நாளடைவில் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் தேவர்து சிங் மனைவி பிரியங்காவிற்குத் தெரிய வந்தது. இதனால் கணவன், மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா, நிகிதா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்குச் சென்று அவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் தேவர்துசிங், நிகிதா சில நாட்கள் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். ஆனால், தனது முன்னாள் காதலனை மறக்க முடியாத நிகிதா, அவரது மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தார். இந்த கொலை பிளானை தேவர்து சிங்கிடமும் கூறீயுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செப்.15-ம் தே பன்வெல் ரயில் நிலையத்தில் இறங்கி பிரியங்கா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கூலிப்படையினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இந்த சம்பவம் பன்வெல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது பிரியங்காவிற்கும், அவரது கணவருக்கும் பிரச்சினை இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நிகிதா பள்ளிக்குச் சென்று பிரியங்கா சத்தம் போட்ட விவகாரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்த போது, கூலிப்படையை ஏவி பிரியங்காவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நிகிதா, தேவர்து சிங் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அத்துடன் கூலிப்படையினரைத் தேடி வருகின்றனர். ஆசிரியை ஒருவரே கூலிப்படையை ஏவி ஒரு பெண்ணைக் கொலை செய்த சம்பவம் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.