ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி உயிரிழந்த சிறுவனின் கண்ணைத் தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்த இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், தடங்கம் ஸ்ரீமண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இதில் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டி 68 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனுக்குடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் பாலக்கோடு திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் ஜல்லிக்கட்டைப் பார்க்க குடும்பத்துடன் வந்தார். அப்போது பார்வையாளர்கள் கேலரியில் இருந்த அவரது மகன் கோகுல்(14) காளைகளை வாகனத்தில் ஏற்றுவதைப் பார்க்கும் ஆர்வத்தில் அருகில் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது மிரண்ட ஒரு மாடு கோகுலின் வயிற்றில் குத்திக் கிழிக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்த இடத்தில் போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒருமணி நேரம் தாமதமானதாகவும், அதனாலேயே அவர் உயிர் இழந்ததாகவும் கோகுலின் தந்தை சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
மேலும் தங்கள் மகனின் கண்களைத் தானம் செய்ய முடிவு எடுத்திருப்பதாகவும் இன்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டில் உயிர் இழந்த சிறுவனின் கண் தானம் செய்யப்படும் என்ற பெற்றோரின் முடிவு நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.