சபரிமலை அய்யன் கோயில் நடை மகரவிளக்கு தரிசனத்திற்காக வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த முறை சபரிமலை தரிசனத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள், முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.
பேட்டியில் அனந்த கோபன் கூறியதாவது, “சபரிமலை நடை நவம்பர் 16-ம் தேதி மாலைதிறக்கும். நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 இரவு நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜனவரி 14-ம் தேதி நடக்கும். சபரிமலை நடை ஜனவரி 20-ம் தேதிவரை திறந்திருக்கும். பம்பை, நிலக்கல் பகுதிகளில் 13 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒருநாளுக்கு இத்தனை பக்தர்கள்தான் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும். சபரிமலை வருவோருக்கு கரோனா பரிசோதனை சான்றிதழும் அவசியம் இல்லை.
சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் வசதி செய்துள்ளோம். பயோடாய்லெட், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கரோனா காலச்சூழலுக்கு பின்பு முதன்முறையாக இப்போது எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காகத் திறக்கப்படுகிறது. இந்த வழியில் செல்லும் பக்தர்களுக்குத் தண்ணீர் மற்றும் உணவுத்தேவையைத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்யும். நிலக்கலில் இருந்து பம்பைக்கு நிமிடத்திற்கு ஒரு பேருந்து செல்லும். இதற்காக 200 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இதேபோல் கேரள போக்குவரத்துக் கழகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன” என்றார்.