
உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று மின்கம்பி உரசியதில் பரிதாபமாக உயிரிழந்தது. மக்கள் கண்முன்னே இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது.
தமிழகத்தில் அண்மை காலமாக யானைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வயல்வெளிக்கு வந்த மூன்று யானைகள் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது. அதனுடன் இருந்த குட்டி யானைகள் தாயை இழந்து பரிதவித்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த நிலையில் பாலக்கோடு அருகே காட்டு யானை வந்து ஊருக்குள் நுழைந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கிறது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து நேற்று மாலை வெளியேறிய காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தர்மபுரி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு வந்த காட்டு யானை இன்று காலை களவல்லி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக சென்றது. இதனைப் பார்த்த ஊர் மக்கள் எல்லாம் அங்கு கூடினர். அந்த நேரத்தில் விவசாய நிலத்திலிருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்போது தாழ்வாக இருந்த மின் கம்பியில் யானை உரசி இருக்கிறது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு இருக்கின்றனர். ஆனால் யானை எந்த சத்தத்தையும் கேட்காமல் சென்றதால் மின்சாரம் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து பாலக்கோடு, மொரப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். பொதுமக்கள் கண்முன்னே யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.