
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணைய வழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவ. 24 முதல் நவ.30-ம் தேதி வரை இறுதிநாள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு நுகர்வோருக்கு நவ.28-ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும். அதேசமயம், ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.