
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகையை திருடி சென்றுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தொண்டபாடி கிராமத்தில் வசித்த தம்பதியர் மாணிக்கம்(75), மாக்காயி(70) இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களின் நான்கு மகள்களை இதே ஊரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இன்று காலையில் மாணிக்கம், மாக்காயி இருவரும் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.
மாக்காயி தாலிக்கொடி மற்றும் கருகமணி அணிந்திருந்தார். கொலைகாரர்கள் அவற்றை அறுத்துச் சென்றுள்ளனர். தாலிக்கொடியில் கால் பகுதி மட்டுமே கழுத்தில் எஞ்சியிருந்தது. மீதியைப் பறித்து சென்றுள்ளனர். கொலை செய்தவர்கள் தங்களைப் பற்றிய தடயங்கள் மற்றும் துப்பு எதுவும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக இருவரையும் சுற்றிலும் மற்றும் வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர்.
தகவல் அறிந்த வி.களத்தூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரட்டைக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இக்கொலைகள் நகைக்காக நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கிறதா என தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.