
ஜார்க்கண்டில் 3.7 ரிக்டர் மற்றும் ஹரியாணாவின் ஜஜ்ஜார் பகுதியில் 3.1 ரிக்டர் என்ற அளவிலான மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய நிலத்திட்டுகளில் கடந்த சில நாட்களாக பலமானது முதல் மிதமானது வரை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இதனிடையே இந்தியா, வங்கதேசம், மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் நேற்று இரவு 9.53 மணிக்கு நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில், 3.1 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 15-ம் தேதி ஹரியானாவுக்கு அருகில் உள்ள தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 3.1 என்ற அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனிடையே இன்று அதிகாலை 3.22 மணியளவில் ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் 3.7 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது நிலப்பரப்பில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது கண்டறியப்பட்டுள்ளது.