மத்தியப் பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டின் இறுதிநாளான இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி பகுதியில் இன்று பிற்பகல் 2.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்திரா தீவுகளில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று காலை சரியாக 10.49 மணியளவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிமீ (225 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேஷியா மட்டுமல்லாது அதனை ஒட்டிய கடற்கரை பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. மேலும், சுமத்திரா தீவுகளை ஒட்டிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டன. ஆனால், இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து இல்லை என்று கூறியது.
அதேபோல நேற்று முன்தினம் இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானது
இந்தியப் பெருங்கடலின் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும் நேற்று முன் தினம் நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்களின்படி, முதல் நிலநடுக்கம் 10கி.மீ ஆழத்தில் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏற்பட்ட நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளது. நான்காவது நிலநடுக்கம் 7.7 கி.மீ ஆழத்தில், 5.8 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. ஜப்பான் மற்றும் ரஷ்யா இடையே உள்ள குரில் தீவில் சிலநாட்களுக்கு முன்பாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்டின் இறுதியில் வடமாநிலங்கள் மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் பல நிலநடுக்கங்கள் பதிவானதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதேபோல 2023ம் ஆண்டின் இறுதிநாளான இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.