கோவை சிறையில் இ- சைக்கிள் தயாரிப்பு: ஏரோநாட்டிக்கல் படித்த கைதியின் அசத்தல் முயற்சி!

கோவை சிறையில் கைதி தயாரித்த இ-  சைக்கிள்
கோவை சிறையில் கைதி தயாரித்த இ- சைக்கிள் கோவை சிறையில் இ- சைக்கிள் தயாரிப்பு: ஏரோநாட்டிக்கல் படித்த கைதியின் அசத்தல் முயற்சி!

கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் தண்டனை கைதி ஒருவர் சோலார் பேனல் மூலம் இயங்கும் இ-சைக்கிளை உருவாக்கி அதை சிறைப் பயன்பாட்டுக்கு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (31). இவர், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுகஆதித்தன் சிறையில் இருந்தபடியே இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் சோலார் பேனல் மூலம் இயக்கலாம் அல்லது சைக்கிளை மிதிக்கும் போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டும் இயக்கலாம் அல்லது பேட்டரியில் சார்ஜ் ஏற்றியும் ஓட்டலாம். 

தற்போது, இந்த இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம் கூறுகையில், "யுகஆதித்தன் சிறை வளாகத்துக்குள் உள்ள கருவிகளைப் பழுது பார்க்கும் பணியில் உள்ள வார்டனுக்கு உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என நினைத்து முயற்சித்தார்.

அப்போது, சிறை வளாகத்தில் பயன்படுத்தாமல் கிடந்த சைக்கிளைப் பார்த்த அவர், அதனை சூரிய ஒளி மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்க முடிவு செய்தார். இதற்காக வார்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து இ-சைக்கிள் செய்ய  உதவினர்.

அதன்படி, இ-சைக்கிளின் நடுவில் தகடுகளை வைத்து அங்கு பேட்டரியை பொருத்தினார். மேலும், பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக டைனமோவையும் பொருத்தினார். சைக்கிளை மிதிக்கும் போது டைனமோ மூலமாக பேட்டரி சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைத்தார். மின்சாரம் மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். கேரியரில் சோலார் பேனலை பொருத்தி அதன் மூலமாகவும் சைக்கிள் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளார். 

இதனைச் செய்ய அவருக்கு ஒரு வாரம் தான் தேவைப்பட்டது. மிகவும் எளிமையாக திறமையாக பணியை செய்த யுக ஆதித்தனை நாங்கள் வெகுவாக பாராட்டினோம். இந்த சைக்கிளை தற்போது டவர் பிளாக்கில் ரோந்து செல்லும் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இதுபோல 9 சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தற்போது யுக ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்‌ஷாவை தயாரிக்கிறார். ஓரிரு மாதங்களில் இந்த பணி முடிவடையும். அதன் பின்னர் மின்சார ஆட்டோவை ஜெயில் வளாகத்தில் ரோந்து பணியில் பயன்படுத்த உள்ளோம்" என்று சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in