
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்காற்றும் பொங்கல் பானை, கரும்பு, பச்சரிசி, காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவைகளை வாங்க தற்போது முதல் பலர் கடைகளை நோக்கி படையெடுத்து வரும்சூழலில் பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பூக்களின் விலையானது, தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. உதாரணமாக, நெல்லையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ நேற்று ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்ட சூழலில், இன்று 4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று 2,500 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று 3,000 ரூபாய்க்கும், கலர் கேந்தி நேற்று ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.120க்கும், செவ்வந்தி நேற்று ரூ.180 விற்பனை செய்யப்பட்ட சூழலில், இன்று ரூ.240 க்கும், பட்டன் ரோஸ் நேற்று ரூ.240 க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.300க்கும், மஞ்சள் கேந்தி நேற்று ரூ.80க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை அதிகமாக இருந்த போதிலும், பொங்கல் பண்டிகையையொட்டி தேவை இருப்பதன் காரணமாக ஏராளமான மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்று வருகின்றனர். மேலும், தற்போது அதிகமான பனி பொழிவு காணப்பட்டு வருவதால் பூக்களின் உற்பத்தியானது குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நாளை மகர ஜோதி விழா சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொண்டாடப்பட உள்ள சூழலில், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் பூக்களின் விலை அதிகமாக காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.