5 நாட்களாக ரகசிய சோதனை; காரில் வந்த 160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: ராமநாதபுரத்தில் தொடரும் கடத்தல்!

பிடிபட்ட போதை பொருட்கள்
பிடிபட்ட போதை பொருட்கள்

இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 160 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக  ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின், பீடி இலை உள்ளிட்ட போதைப்பொருட்களும்,  சமையல் மஞ்சள் உள்ளிட்டவைகளும்  கடத்துப்படுவதும்,  அதே  வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் அதிகரித்துள்ளது. 

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில்  வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள்  கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முகாமிட்டு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். 

நேற்று முன்தினம்  இரவு சத்திரக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சென்னையைச் சேர்ந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த இரண்டு பேர்  முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து காரை முழுமையாக சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட  போதைப்பொருள்கள் இருந்தது  தெரியவந்தது.

அதனையடுத்து அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்ததில் அவர்கள் காரில் கடத்தி வந்தது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்கள்  50 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் 38 கிலோ கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனத் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ர160 கோடி என சொல்லப்படுகிறது.

அதனை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லியோ பாக்கியராஜ் (39), தனசேகரன் (32) ஆகிய இருவரும் நேற்று மாலை  ராமநாதபுரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இதனை  ஒப்படைக்க இருந்ததாக கைதான இருவரும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதையனையடுத்து இது தொடர்பாக தங்கள் விசாரணையை அதிகாரிகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in