உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி மேல் பறந்த ட்ரோன்; சிக்கிய கர்நாடக இளைஞர்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி மேல் பறந்த ட்ரோன்; சிக்கிய கர்நாடக இளைஞர்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகிய இடங்களை ட்ரோன் மூலம் படம் பிடித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் அனுமதியின்றி ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மேல் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமாக ட்ரோன் ஒன்று பறந்தது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் உயர்நீதிமன்றத்தை சுற்றி சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் ட்ரோனை பறக்கவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அந்த இளைஞர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பதும், தனது உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு ட்ரோன் கேமராவை எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது ட்ரோன் கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகத்தில் ஒரு பகுதி என தடை செய்யப்பட்ட இடங்களின் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் தலைமை செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்களின் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகங்கள், மத்திய, மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல்துறையில் உரிய அனுமதி பெற்ற பிறகு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் உரிய அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in