சாலைப்பணிக்காக செம்மண் இறக்கும்போது, உயர் அழுத்த மின் கம்பியில் டிப்பர் லாரி உரசியதால் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலியான சம்பவம் திருவாரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை உடையார் கோயில் தெரு பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகன் மணிகண்டன்( 28). டிப்பர் லாரியில் ஓட்டுநராக பணிபுரியும் இவர் தஞ்சாவூரில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு இன்று காலை திருவாரூருக்கு வந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே ஆர்.பி.எஸ் சாந்தா நகர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிக்காக அந்த செம்மண்ணை இறக்குமாறு கூறப்பட்டிருக்கிறது. டிப்பர் லாரியின் ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி செம்மண்ணை இறக்க மணிகண்டன் முயற்சித்தார். அப்போது எதிர்பாரா விதமாக டிப்பர் லாரியின் மேற்பகுதி, உயரழுத்த மின் கம்பியில் உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் லாரியில் இருந்த மணிகண்டன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் மணிகண்டன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.