மன்னார் வளைகுடா கடலில் இரட்டை மடிவலையில் பிடித்து வந்த 5 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் இரட்டை மடிவலை மூலம் மீன்கள் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் தொழிலுக்குச் சென்று கரை திரும்பும் நாட்களில் தினமும் சோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், பாம்பன் கடலில் தொழிலுக்கு சென்று விட்டு இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவளத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 36 படகுகளில் இரட்டை மடி மூலம் மீன்பிடித்து வந்தது தெரிந்தது.
இந்த வலைகளில் பிடித்து வந்த 5 டன் மீன்கள், 4 விசைப்படகுகளில் இருந்த இரட்டை மடிகளை பறிமுதல் செய்தனர். கடந்த 20 நாட்களில் மட்டும் 125க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 15 டன் மீன்கள் பறிமுதல் செய்து ஏலமிட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.