குருவாயூர் கோயிலில் தீபவிளக்கு தொடங்கி குத்துவிளக்கு வரை பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் கொடுத்தவை ஏலம் விடப்பட்டது. இவை ஒருகோடியே 32 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயின.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் பிரசித்திப்பெற்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக விளக்குகள் வாங்கிக்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. சிறிய அளவிலான மண்ணால் ஆன அகல்விளக்கு தொடங்கி, பெரிய, பெரிய வெள்ளி, தங்க விளக்குகள் வரை இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாங்கி கொடுப்பது வழக்கம்.
இப்படி நேர்த்திக்கடனாக வரும் விளக்குகள் வருடத்திற்கு ஒருமுறை ஏலம் விடப்படும். இந்த வருவாய் கோயிலின் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றுப்பரவல் காரணமாக இந்த ஏலம் நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஒருமாதமாகவே இந்த ஏலம் நடந்துவந்தது. இது இப்போது முடிவடைந்து உள்ளது. கோயிலுக்கு வந்த விளக்குகளை ஏலம்விட்டதில் ஒருகோடியே 32 லட்சத்து 10,754 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கோயில் மேலாளர்கள் ராதா, பிரமோத் களரிக்கல் தலைமையில் இந்த ஏலம் நடைபெற்றது.