தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக 66,85,537 பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவுப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 66,85,537 பேர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 31,07,600 ஆண்களும், 35,77,671 பெண்கள், 266 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், 19 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் 28,43,792 பேர்களும், 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,32,990 பேர்களும், 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,36,756 பேர்களும் 60 வயதுக்கு மேற்பட்ட 6,111 பேர்களும் அரசு வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,46,358 பேரும் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் வயதைக் குறைக்க வேண்டும் என்றும், அப்படி குறைத்தால் அனைவருக்கு அரசு வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.