
கரும்பை அப்படியே சாப்பிடாமல் கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புதான் பிரதானம். என்ன விலை கொடுத்தாலும், எங்கேயாவது தேடிப் போயாவது கரும்பை வாங்கி வந்து படையலிட்டு சாப்பிடுவது நம் வழக்கம். அந்தக் கரும்பை அப்படியே சாப்பிட வேண்டாம், கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் இதுகுறித்து கூறுகையில், " ``பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான கரும்பு விளையவைக்கும் விவசாய நிலத்திலிருந்து விற்பனை மேற்கொள்ளப்படும் இடங்கள்வரை பல்வேறு அசுத்தங்களை கடந்தபின்னரே தங்கள் இல்லத்தை வந்தடைகின்றது. இந்நிலையில் கரும்பை துண்டாக்கி நேரடியாக கடித்து தின்பதால் பல்வேறு நோய்கள் உண்பவர்களுக்கு வருவதற்கு வழிவகுக்கும். எனவே கரும்பை சுவைப்பதற்கு முன்னர் சுத்தமான நீரில் கழுவிய பின்னர் உபயோகிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் "அரிசியில் பூஞ்சைகள் இல்லாத அரிசியாகவும், தரமான வெல்லம்தானா என்பதை அறிந்தும், நெய் உணவு தயாரிக்க உள்ளதுதானா அல்லது போலி நெய்யா என்பதை சரிபார்த்தும், அதேபோல் தரமான திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொருட்களை கவனமாக பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.