தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரைப் பயன்படுத்தக் கூடாது: காவல்துறையினருக்கு டிஜிபி அதிரடி உத்தரவு!

தனிப்பட்ட வாகனங்களில்  போலீஸ்  ஸ்டிக்கரைப் பயன்படுத்தக் கூடாது: காவல்துறையினருக்கு  டிஜிபி அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள போலீஸ் போர்டு, ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012-ம் ஆண்டு ஓன்றிய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் நான்கு சக்கர வாகனங்களில் (கார், ஜீப் உள்ளிட்ட) கருப்புநிற ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் போர்ட்,, ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது எனவும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கரைக் காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது எனவும், அலுவலக ரீதியாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் போர்ட் மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணி புரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்ட் அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in