புதுக்கோட்டையில் இன்று (ஜன.26) நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் தனக்கென இருக்கை ஒதுக்காததால் விழாவை திமுக எம்.பி புறக்கணித்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
74-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர், எஸ்.பி வந்திதா பாண்டேவுடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய பிரமுகர்களுக்கு அவர்களது பெயர்களுடன் கூடிய இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கென தனியாக இருக்கை ஒதுக்கவில்லை. எங்காவது இருக்குமா என அங்கும் இங்கும் அவர் தேடிப் பார்த்தார். இருக்கை இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்த அவர், அங்குள்ள ஒரு இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
பின்னர் என்ன நினைத்தாரோ சிறிது நேரத்தில் விழாவை புறக்கணித்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து அப்துல்லா கூறியபோது, "எனக்கு வேறொரு வேலை இருந்ததால் நான் கிளம்பிவிட்டேன். மற்றபடி வேறொன்றும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பியதற்கு இதுவே காரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என சிரித்தபடி கூறினார்.
சபை நாகரிகம் கருதி அவர் அவ்வாறு கூறினாலும் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படாதது பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.