திமுக பெண் கவுன்சிலர், கணவர், மகள் தற்கொலை: கடன் பிரச்சினையால் நடந்த விபரீதம்

அருண்லால், தேவிபிரியா
அருண்லால், தேவிபிரியா

ராசிபுரம் நகர திமுக துணை செயலாளர்,  தனது மனைவி,  மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர திமுக துணை செயலாளராக இருந்தவர் அருண்லால் (53). இவர் நாமக்கல்லில்  நகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிப்பிரியா (46). இவர் ராசிபுரம் நகர மன்றத்தின் 13-வது வார்டு திமுக உறுப்பினராக இருந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  ஒரு மகள் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் மோனிஷா (18) இவர்களுடன் வசித்து வந்தார். 

இந்தநிலையில் ராசிபுரத்தில் உள்ள  இவர்களது வீட்டில் அருண்லால், தேவிப்பிரியா, மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது இன்று காலை  தெரியவந்துள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம்  உள்ளிட்ட காவல்துறையினர் விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த தற்கொலைக்கான காரணம்  குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என முதல் கட்டமாக கூறப்படுகிறது. தன் மனைவி மகளுடன் திமுக நகர துணை செயலாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in