தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய கமிட்டி நிர்வாகிகளை தகுதி நீக்கியது செல்லாது: உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களையும் நீக்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா, ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரிய காரணங்கள் இல்லாமல், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க முடியாது எனவும், தங்கள் நியமனத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் கவுரவ பதவிகள் எனவும், அரசிடம் எந்த ஊதியமும் பெறாத நிலையில், நியமனத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்க்க முடியாது எனவும், அரசு சட்டப்படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கவுரவ பதவியாக இருந்தாலும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம் எனவும் கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in