
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சௌந்தரராஜனின் ஜாமீன் மனுவை சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து, இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளது.
இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியும், நான்காவது குற்றவாளியுமான சௌந்தரராஜன் என்பவர் ஜாமீன் கோரி சென்னை நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கருணாநிதி முன்பாக இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 16,500 நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால் வெளிநாடு தப்பிச்செல்லவும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம், எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.