சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்புக் கருதி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் அப்பகுதியில் வசித்த 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 65 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.