ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் வனபாதுகாப்பு அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தோட்ட உரிமையாளர் என்ற அடிப்படையில் ரவீந்திரநாத் எம்.பி. உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
அத்துடன், ரவீந்திரநாத் மீது விசாரணை நடத்துவதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ரவீந்திரநாத் எம்.பி.க்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு குறிப்பிட்டிருந்தார் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா.
இதனிடையே, தேனி உதவி வனபாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் பணி மாற்றம் செய்யப்பட்டதோடு, காத்திப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.