
காதலனுடன் தங்கள் மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செட்டி மல்லன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை(45). இவரது மனைவி சங்கரம்மாள்(40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதில் கல்லூரியில் படித்த மகள் ஒரு வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். அவருடன் சிலதினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் அவரது பெற்றோரான சங்கரம்மாளும், சின்னத்துரையும் சோகத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த வருத்தத்தில் சங்கரம்மாள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் தூங்கி விழித்தபோது இதை சின்னத்துரைப் பார்த்தார். உடனே வேதனை தாங்காமல் சாயர்புரம் பகுதியில் உள்ள தன் தோட்டத்திற்குச் சென்று விஷம் அருந்தி மயங்கினார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மகள் காதலனோடு சென்றதால் வேதனையில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.