ராணுவவீரரின் மனைவி அடித்துக்கொலை: பணத்தகராறில் மாமனார், மைத்துனர் வெறிச்செயல்

ராணுவவீரரின் மனைவி அடித்துக்கொலை: பணத்தகராறில் மாமனார், மைத்துனர்  வெறிச்செயல்

குமரி மாவட்டத்தில் பணத்தகராறில் மருமகளை மாமனரும், மைத்துனரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (78). இவரது மகன் அய்யப்பன் கோபி(43). இவர் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் கோபி இறந்துவிட்டார். அவருக்கு துர்கா(38) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

துர்கா தன் கணவர் இறந்துவிட்டதால் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ராணுவத்தில் வேலை செய்த அய்யப்பன் கோபிக்கு அவர் இறப்புக்கு பின்பு, கிடைக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையால் வழங்கப்படும் பணம் வந்தது. இந்தப் பணம் துர்காவிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துர்காவுக்கும், அவரது மாமனார் ஆறுமுகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு இந்தச் சண்டை முற்றியது. அப்போது துர்காவின் மைத்துனரும், ஆறுமுகத்தின் இளைய மகனுமான மது(43) என்பவரும் அங்கே வந்தார். மதுவும், ஆறுமுகமும் சேர்ந்து துர்காவை சரமாரியாக கல்லாலும், கம்பாலும் தாக்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் துர்கா மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி துர்கா உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப்பதிந்து துர்காவின் மாமனார் ஆறுமுகம், மைத்துனர் மது ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in