
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அகவிலைப்படி உயர்வினை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பள உயர்வுக்கும் வழிவகுக்கும் என்பதால், மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களில் இப்போதே பண்டிகை உற்சாகம் பிறந்துள்ளது.
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புதிய அகவிலைப்படி உயர்வு குறித்தான அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். புதிய அகவிலைப்படி உயர்வு 4% என்றளவில், நடப்பாண்டின் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.
இதன் மூலம் சம்பளத்தில் உயர்வு என்னும் நீண்டகால ஆதாயம் கிட்டுவதுடன், பண்டிகை காலத்துக்கான போனஸ் என்பதற்கு நிகராக கணிசமான நிலுவைத் தொகையும் அரசு ஊழியர்கள் கையில் புரள வாய்ப்பாகும்.
புதிய அறிவிப்பின் மூலம் தற்போதைய அகவிலைப்படி 42% என்பதிலிருந்து 46% என்பதாக அதிகரிக்க உள்ளது. அரசு ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு, அக்டோபரில் அறிவிப்பாகும் என்று சொல்லப்பட்டு அந்த நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பாக உள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை பணியாளர்கள் எதிர்கொள்ளும் வகையில், 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை பரிசீலித்து வழங்கும் நடைமுறை உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இவற்றை தங்கள் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் வழங்க முன்வருகின்றன.