அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டுச் செயல்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நல்ல திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வாரத்தில் இரண்டு பாடவேளைகள் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை ஆகிய 5 கலைச்செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பில், “கலை மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்க, பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியும் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.