
கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 9ம் கட்ட அகழாய்வு பணியின் போது பண்டைய காலத்தை சேர்ந்த ஸ்படிக கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பண்டைய கால வாழ்வியல் வரலாற்றை உலகிற்கு எடுத்துகாட்டும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடி விளங்கி வருகிறது. இங்கு நடந்து வரும் அகழாய்வு பணிகளின் போது ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் 175 செ.மீ ஆழத்தில் XM 193 என்ற அகழாய்வுக் குழியில் இருந்து ஸ்படிகத்தினால் ஆன எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எடை கல் சற்று கோள வடிவில் உள்ள நிலையில் இதன் மேல்பகுதி மட்டும் தட்டையாக உள்ளது.
பளபளப்பான காணப்பகும் இந்த ஸ்படிக கல் ஒளி புகும் தன்மையுடன் காணப்படுகிறது. 2 செ.மீ விட்டமும் 1.5 செ.மீ உயரமும் கொண்ட இந்த ஸ்படிக கல்லின் எடை 8 கிராம். இந்த எடை கல்லுடன், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்படிக கல்லின் பயன்பாடு குறித்து முழுமையான ஆய்வுக்கு பின் தெரியவரும்.